சனி, 26 ஜூன், 2010

பல்லவக் கலைச் செல்வங்களைத் தேடி ஒரு பயணம் (பாகம் - 1)

பொன்னியின் வரலாற்றுப் பேரவை நண்பர்களுடன் பல்லவர்களின் குடைவரைக் கோயில்களையும், கற்றளியையும் தேடி ஜூன் மாதம் 19-ஆம் தேதி ஒரு பயணம் மேற்கொண்டோம். காலை 7 மணிக்கு மயிலாப்பூரில் பயணத்தைத் தொடங்கிய எங்களது வாகனம் ஷஷ்வந்த் மற்றும் சவுரப் உடன் 7.45 மணிக்கு கத்திப்பாரவை வந்தடைந்தது. வாகனம் வருவதற்கு முன்னரே எங்களது வழிகாட்டியும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் குருவுமான திரு. சிவபாதசேகரன் (SPS)அவர்கள் எங்களுக்கான மதிய உணவுகளுடனும், நொறுக்கு தீனிகளுடனும், பொவண்டோ மற்றும் தண்ணீர் பாட்டில்களுடனும் வந்து வழியனுப்பத் தயாராக இருந்தார். வாகனம் வந்தவுடன் நான், சிங்கை விஜய் குமார், அர்விந்த், ராமன், ஸ்ரீ ஸ்ரீ, சௌமியா, சதீஷ்குமார் அருணாச்சலம் ஆகியோர் வாகனத்தில் ஏற திரு. SPS அவர்கள் வழியனுப்பி வைக்க எங்கள் பயணம் தொடர்ந்தது. இடையில் பெங்களூரில் இருந்து வந்த ஸ்ரீராம் எங்களுடன் தாம்பரத்தில் இணைந்து கொண்டார்.

அறிமுகப் படலம் முடிந்து பல்லவர்களின் சிற்பங்களைப் பற்றிய கேள்வி பதில்கள் ஏராளமாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. குறிப்பாக ஸ்ரீஸ்ரீ, சவுரப் மற்றும் ஷஷ்வந்த் ஆகியோர் ஏராளமானக் கேள்விகள் கேட்டனர். அவை யாவற்றிற்கும் விஜய் அருமையான விளக்கங்களுடன் பதிலளித்து வந்தார் அவருக்கு உறுதுணையாக அர்விந்த் அவர்களும் பல மேற்கோள்களுடன் விளக்கம் அளித்து வந்தார்.

அதில் ஒரு சில கேள்விகள், ஏன் இப்பொழுது நாம் காணும் பழங்காலக் கோயில் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் இருக்கின்றன? ஏன் அதற்கு முற்பட்ட காலத்தின் கோயில்கள் இல்லை? இதற்கு பதிலாக, மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் உதாரணமாக காட்டப் பட்டது. “செங்கல், உலோகம், மரம், சுதை போன்ற வழக்கமான கட்டுமானப் பொருட்கள் இல்லாமல், நான்முகன், சிவன், திருமால் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் விசித்திரச் சித்தன் என்னும் அரசனால் எடுக்கப்பட்ட இலக்ஷிதக் கோயில்” என்று பல்லவ மன்னனால் வடிக்கப் பட்ட கல்வெட்டு கொண்டு இதற்கு முன்னர் இருந்த ஆலயங்கள் அழியக் கூடிய பொருட்களால் கட்டப் பட்டதால் தான் அவற்றை நாம் காண முடியவில்லை என்று பதிலளிக்கப்பட்டது. அது மட்டுமின்றி நம் முன்னோர்கள் கற்களை வீரக்கல், நடுக்கல் மற்றும் முதுமக்கள் புதைக்கப்பட்ட இடத்தை குறிப்பிட மட்டும்தான் பயன்படுத்தினர் என்றதொரு ஊகம் இருப்பதாலும் நமக்கு 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயில்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் விவாதிக்கப் பட்டது. இடையிடையே ஸ்ரீஸ்ரீ அவர்கள் தாங்கள் அமெரிக்காவில் நடத்திய பொன்னியின் செல்வன் நாடகத்தின் புகைப்படங்களைக் காட்டி விளக்கி எங்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

இது மட்டுமன்றி, சிற்பங்களுக்கான பாறைகளின் விதங்கள், அவை உருவாகும் விதம், பல்லவர்கள் பாறைகளைத் தேர்ந்தெடுத்த இடம், பல்லவக் குடைவரைகள் ஜெயின் குடியிருப்புகளின் அருகாமை என பற்பல் விவாதங்கள் நடந்தன. இந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் காட்டிய ஆர்வம், விவாதத்தில் பங்கு கொண்ட விதம் மிகவும் ஆச்சரியம்!

இந்த விவாதங்களுக்கிடையே நாங்கள் முதலில் சிங்கவரம் நோக்கி பயணித்து வந்தோம். எங்களது பயணத்தில் இன்று நாங்கள் பார்க்கப் போவதாக முடிவு செய்திருந்த இடங்கள் சிங்கவரம், தளவானூர், மண்டகப்பட்டு, பனைமலை. இவற்றை அர்விந்த் அவர்கள் முன்கூட்டியே காலநேரத்திற்கு தகுந்தவாறு முடிவு செய்து வைத்திருந்தார்.

செஞ்சியை அடுத்து மேலச்சேரி, வடபாலை செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள சிங்கவரத்தை சுமார் 11 மணியளவில் அடைந்தோம். சுட்டெரிக்கும் ஆதவன் கோபக்கனலை வீசினாலும் மலைமேல் ஏறுவதற்கு எங்களுக்கு பெரிய மலைப்பாக இருக்கவில்லை ஏனென்றால் பல்லவனின் கலையை பார்க்கும் ஆர்வம் மேலோங்கி இருந்ததோடு இதுதான் முதல் ஆலயம் என்பதாலும். ஆனால் வந்தது ஒரு சோதனை, ஆலயம் பூட்டிக் கிடந்தது! சாவி அர்ச்சகரிடம்! அவரைத் தேடி பல இடத்தில் அலைந்து கைபேசி எண்ணைக் எப்படியோ கண்டுபிடித்து அழைத்தால் “நான் திருவண்ணாமலை சென்று கொண்டிருக்கிறேன் இப்பொழுது வரமுடியாது” என்று சொல்லிவிட்டார். பின்னர் விஜய் மற்றும் அர்விந்த் அவரிடம் பேசி பின்னர் அவரது மேலதிகாரியைத் தொடர்பு கொண்டு எப்படியோ அவரை வரவழைக்க ஏற்பாடு செய்ததும் அவர் இல்லத்திற்கு வந்து அழைத்துச் செல்ல அனுமதி தந்தார். தாமதமானாலும் சென்று அழைத்து வந்த பின்னராவது நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்குமென்றால் (அதுதாங்க புகைப்படம் எடுக்க அனுமதி) அதுவும் இல்லை. தீபாராதனைக் காட்டிவிட்டு சில விளக்கங்கள் கொடுத்து விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்.

நமது விஜய் அவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார் ஆனால் ஒன்றுக்கும் அந்த பட்டர் செவிசாய்ப்பதாய் இல்லை. என்ன செய்வது ஏராளமான ஆலயங்களில் இந்தப் பிரச்சினை எங்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆலயத்தில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது என்னதான் கொள்கையோ!!!

இதோ சிங்கபுர ஆலயத்தோற்றம், இந்தக் கோபுரங்கள் மண்டபங்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை, உள்ளிருக்கும் குடைவரை மட்டும்தான் பல்லவர்காலம்.








இந்தப் படிகளில் ஏறுவதற்குள் தொண்டை வரண்டு தலைச் சுற்றலே வந்துவிடும் போலிருந்தது, நம்முடைய இக்காலப் பணியால் கிடைத்த வரம்...


இதோ நம் நண்பர்கள் ஆலயம் திறப்பதற்காக வாசலில் தவம் கிடக்கின்றனர்...


ஆலயத்தின் உட்புறம்...


ஆலயத்தின் உட்புறம் அமைந்துள்ள நீர் நிறைந்த தடாகம்...


ஒரு பழமையானத் தூணை மறைத்து செய்யப்பட்டிருக்கும் புதிய பணி...


தாயார் சன்னதிக்குள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கொற்றவை (அனுமதி இல்லையே அப்புறம் எப்படி இந்தப் படம்?? சுட்ட படம்தான்)


இனிதான் மிக மிகப் பெரிய அனந்தசயனப் பெருமாள் எனும் இரங்கநாதரைக் காணப்போகிறோம். இவர் 24 அடி நீளமானப் பெருமாள், இவருக்கு அடுத்துதான் திருமயம் மற்றும் திருவரங்கநாதர்கள் வருகின்றனர். இவருடைய மார்பில் மற்ற இடங்களில் போல் அல்லாமல் திருமகள் தனது முழு உருவத்தோடே செதுக்கப்பட்டிருக்கிறாள். இதோ நீங்கள் பார்த்த கொற்றவையும் இனி நீங்கள் பார்க்கப் போகும் அரங்கநாதரும்தான் பல்லவர்களால் கல்லில் குடைவரையோடு சேர்த்து வடிக்கப்பட்டவர்கள்.

அரங்கரை முழு உருவமாக காட்டமுடியாமைக்கு வருந்துகிறேன், அதற்கு அனுமதி எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்திருந்தாலும் ஒரு கைதேர்ந்த புகைப்படக் கலைஞரால்தான் அது சாத்தியப்படும். கிடைத்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

பாதமலரில் இருந்து தொடங்குகிறது, ஆஹா! என்னவொரு பிரமிக்க வைக்கும் உருவம்!!!



மார்பில் தெரிகிறதா மகாலட்சுமி...



குடைவரைக்கு வெளியில் இருக்கும் மண்டபத்தில் உள்ள துவாரபாலகர்கள். இவர்களைப் பார்த்தால் பல்லவச் சிற்பம் போல் இல்லை, எனினும் விஜய் அவர்களின் பதிவுக்காக காத்திருப்போம்.





இந்த ஆலயத்தில் இருந்து நாங்கள் வெளியே வரும் பொழுது நேரம் மதியம் 2.00ஐ தாண்டி விட்டது. அங்கிருந்து கிளம்பி எங்களுடன் வந்த பட்டரை செஞ்சியில் இறக்கிவிட்ட பின் செஞ்சி விழுப்புரம் சாலையில் 13ஆவது கி.மீ.ரில் இடப்பக்கம் சுமார் 5 கி.மீ பயணம் செய்து தளவானூரை அடைந்தோம். அற்புதமான வயல்வெளி சூழ்ந்த இந்தக் குடைவரையை இரசித்து விட்டு அங்கேயே மதிய உணவையும் முடித்துவிட்டு வந்த வழியே திரும்பி மேலும் செஞ்சி சாலையில் பயணம் செய்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள மண்டகப்பட்டு குடைவரையை அடைந்தோம். இந்தக் குடைவரைகளைப் பற்றிய தகவல்கள் ஏற்கனவே www.poetryinstone.in தளத்தில் உள்ளமையால் அவற்றின் சுட்டிகளை மட்டும் தருகிறேன்.

http://www.poetryinstone.in/lang/en/2009/04/23/shatrumalleswaraalayam-a-splendid-creation-of-mahendra-pallava.html
http://www.poetryinstone.in/lang/en/2009/05/11/makara-thoranas-an-interesting-link-between-pallavas-and-cambodia.html
http://www.poetryinstone.in/lang/en/2009/05/13/was-this-the-inspiration-behind-mahendra-pallavas-sculptural-quest.html
http://www.poetryinstone.in/lang/en/2009/08/12/the-mystery-behind-the-horns-of-pallava-door-guardians.html
http://www.poetryinstone.in/lang/en/2008/08/31/what-a-mace-what-a-mace.html

பனைமலையைப் பற்றிய படங்களையும் செய்திகளையும் இந்தப் பதிவின் இரண்டாவது பாகத்தில் காணலாம்.

நண்பர் அர்விந்த் வெங்கட்ராமனின் அருமையான புகைப்படங்களை இங்கே காணலாம்:
http://picasaweb.google.com/arvind.venkatraman/Singhavaram#

லேபிள்கள்: , , , ,

7 கருத்துகள்:

27 ஜூன், 2010 அன்று 11:40 PM க்கு, Blogger Parvadha Vardhini கூறியது…

அருமையான பதிவு. அழகான புகைப்படங்கள். அதிலும் கொற்றவை மிகவும் அழகு. இந்தப் பயணத்தில் பங்கு கொள்ள முடியாதபோதும், பயணம் மேற்கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்க்கிறோம். நன்றி.
வர்தினி.

 
27 ஜூன், 2010 அன்று 11:55 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

மின்னல் வேக கருத்துக்கு நன்றி...

சதீஷ்

 
28 ஜூன், 2010 அன்று 12:36 AM க்கு, Blogger Unknown கூறியது…

Hi
Thanks for a descriptive travelogue. Appreciate the pictures, especially.

With regard to old temples-- and why they have not been found... I have a slightly different view. The new temples (some of them) were built upon the old ones.

The recent finding of a very old temple just adjacent to the Shore temple is a good example. You can get a few ideas from the thoughts of archeologists in the linked Hindu/Frontline article. The second picture shows how the granite slabs were place as foundation for the upper structure.

http://www.flonnet.com/fl2222/stories/20051104005113000.htm

Here are more pictures of another blogger taken soon after the initial opening.

http://sankriti.blogspot.com/2010/01/historical-sites-near-chennai-sangam.html

Thanks again for the nice pictures and your description.

Regards, Raj Mutharasan

 
28 ஜூன், 2010 அன்று 1:33 AM க்கு, Blogger Shash கூறியது…

Raj, as you can see, the original Sangam temple in that article is brick, which is very conveniently one of the materials Mahendravarman claims not to have used in the construction of Mandagapattu.

The granite appears to have been placed there by the Pallavas, and more precisely, by Pallavas who came after Mahendra, who, as we see, is the one who started the stone temple trend. If anything, it reinforces the original theory!

 
28 ஜூன், 2010 அன்று 10:17 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

Raj,

The present day temples are re built many times by different Kings. When you read the history of Chozhas you can see plenty of examples in changing the old temples to Katrali (means stone temple). As Sashwant said the Pallava king inscribed in Mandagapattu about his venture into constructing temples without the perishable materials like brick, wood, sudhai etc.

In the present day stone temples it is very difficult to identify the original structure as it was modified many times and the original structure would have ruined or modified totally!

 
29 ஜூன், 2010 அன்று 2:45 PM க்கு, Anonymous vj கூறியது…

my heart bleeds at the sight of the door guardian.

 
29 ஜூன், 2010 அன்று 8:20 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

Vijay,

This is due to the ignorance and illiteracy about maintaining sculptures by the people. They think when it is sand blasted and painted it looks beautiful!! alas they don't know that they are spoiling it!!!

We should start teaching people to appreciate this art which our schools forget to do... you are already in action...

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு