திருவையாறு
தஞ்சையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தூரத்தில் பெரம்பலூர் செல்லும் வழியில் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு ஆகிய ஆறுகளை கடந்து சென்றால் காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் திருவையாறு. ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர். இயற்கை அன்னை என்றென்றும் பசுமை ஆடை அணிந்து பார்ப்போரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகான ஊர்.
இந்த ஊரில் உள்ள அய்யாரப்பரும், அறம்வளர்த்த நாயகியும் எழுந்தருளியுள்ள சிவாலயம் மிகப் பழமையான பெருமைவாய்ந்த ஒன்று. சுயம்புலிங்கம் உடைய இந்த ஆலயம் மிக சக்திவாய்ந்ததும் கூட. இங்குள்ள லிங்கம் சுயம்புவானதால் அபிஷேகம் கிடையாது, புனுகு சாற்றுதல் மட்டும்தான். இந்த தலத்தின் வரலாற்றை தனி பதிவில் பார்க்கலாம்.
இங்கு சித்திரையில் நடைபெறும் ஏழூர் வலம் எனும் விழா வெகு சிறப்பாக நடைபெறும், சிவபெருமான் கண்ணாடி பல்லக்குகளில் ஏறி திருவையாற்றில் ஆரம்பித்து திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று திரும்புவார். இந்த விழாவிற்கு பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, கொளுத்தும் வெயிலிலும் ஐந்தெழுத்தை உச்சரித்து திருமுறைகளை பாடிக்கொண்டு பரவசத்துடன் பரமனை தொடர்ந்து செல்வார்கள். பக்தர்களுக்கு வழிநெடுகிலும் உணவும், நீரும், மோரும் தாராளமாய் கிடைக்கும்.
ஆடி அமாவாசை அன்று நடைபெறும் அப்பர் கயிலாயக் காட்சித் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் ஒரு சிறப்பு ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராய ஆராதனை சங்கீத திருவிழா.
இதோ அய்யாரப்பனின் ஆலயம் தங்களுக்காக...
ஆலயத்தின் முதன்மை கோபுரம்

மனதை மயக்கும் பிச்சாண்டவர், ஆறுமுகர், காரைக்காலம்மை பல ஆடல் நங்கைகள் மற்றும் ஒரு காதல் ஜோடி
பாற்கடல் கடைந்து வரும் ஆலகாலத்தை அள்ளிப் பருகும் நீலகண்டர், கண்டத்தை பிடிக்கும் அன்னை, காலனை அழித்து பக்தரை காக்கும் ஈசன்

தோடு சூடும் இறைவன் - ஊர்த்துவதாண்டவர், குழலூதும் கண்ணன், பள்ளி கொண்ட அரங்கன், நடராசன், அட இதென்ன பள்ளி கொண்டானுக்கு மேலே காதலர்களா...

எவ்வளவு பெரிய உருவம் பீமனா? அல்லது கடோத்கஜனா..

வாருங்கள் ஆடலரசிகளே! வாருங்கள் நடன ராணிகளே! என்ன கல்கி நினைவிற்கு வருகிறாரா! ஆம் அதே திருவையாறு நடன மாதர்கள்தான் போலும்

தலையலங்காரத்திற்கு இந்த பூ போதுமா! (சும்மா ஒரு கற்பனைதான்)

தியான மண்டபத்தில் உள்ள இந்த மாதர் யாரோ...

வேட்டைக்கு போறார் போலிருக்குது...

இதே போன்ற சிற்பங்களை தஞ்சையிலும் காணலாம்


இந்த யானைத் துதிக்கையை பதம் பார்க்கும் யாளிக்கும் அதே கதிதான்...
நண்பர்களே,இங்கு மனதை உறுத்திய இரண்டு விடயங்களில் ஒன்று ஆலயத்திருப்பணி செய்தால் ஆதீனத்திற்கு ஏதேனும் தீங்கு நேரும் என்று தள்ளிப் போட்டு வருவது, இரண்டாவது இங்கு இருக்கும் அழகிய சிற்பங்களுக்கு வண்ணம் அடிப்பது மற்றும் காரை பூசி மறைத்துவிடுவது.
லேபிள்கள்: ஐயாரப்பர், திருவையாறு, thiruvaiyaru










