செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மை ஃபர்ஸ்ட் ஃபிளைட் & இராமர்-சீதை ஃபிளைட்

ஃபர்ஸ்ட்டு  ஃபர்ஸ்ட்  நான்  ஃபிளைட்ல  பறந்தது சென்னை டூ திருச்சி டூ துபாய். சென்னையில இம்மிக்ரேஷன் முடிஞ்சதும் இப்படி எல்லாரையும் விட்டுட்டு தனியா கெளம்பி போறோமேனு சோகம் ஒரு பக்கம், மொத மொதல்ல  ஃபிளைட்ல  பறக்கப் போறோம்னு சந்தோசம் இன்னொரு பக்கம்.  எப்படியோ ஒரு வழியா சமாளிச்சு வண்டியில ஏறிப் பார்த்தா, ஜன்னல் சீட்டுக்கு பக்கத்துக்கு சீட்டு என்னோடது. கொஞ்சம் ஏமாந்துதான் போயிட்டேன். யாராவது அந்த ஜன்னல் சீட்டுக்கு வந்துடுவாங்களோன்னு ஜன்னலையும், வாசலையும் மாறி மாறி பார்த்துகிட்டே பதினஞ்சு நிமிஷம் சோகம் மறந்து இருந்தேன். அப்புறம் கதவ மூடறத்துக்கு அனவுன்ஸ்மென்ட் வந்தப்புறம் தான், அப்பாடா யாரும் வரலைன்னு நிம்மதியா ஜன்னல் சீட்டுக்கு ஜம்ப் ஆனேன்.

சென்னையில இருந்து வண்டி டேக் ஆ ஃப் ஆகி, கிண்டிய தாண்டி, சைதாப்பேட்டை தாண்டி கொஞ்ச தூரத்துல ஒரு யூ டர்ன் அடிச்சி வடபழனி, கோயம்பேடுனு வரிசையா ஆர்வமா பார்த்துட்டே போறேன், காடு, கழனி எல்லாம் தாண்டி  கொஞ்ச நேரத்துல சிட்டி மாதிரி ஒரு ஏரியா தெரிஞ்சுது. அட அதுக்குள்ள காஞ்சிபுரமா அதுக்கு பக்கத்துல ஒரு ஆறு தெரியுதே, பாலாறா இருக்குமோனு நினைக்கறதுக்குள்ள  'திருச்சி வந்தாச்சு லேண்ட் ஆகப் போகுது'னு அனவுன்ஸ்மென்ட் வருது... அப்போ நான் பார்த்தது கொள்ளிடமான்னு ஆச்சரியப்பட்டுகிட்டே லேண்டிங்க்கு ரெடியானேன்.

இந்த கதை இப்போ எதுக்குன்னு கேட்கறீங்களா? இன்னிக்கு எதேச்சையா கம்பராமாயணம் பாட்டு ஒன்னு படிச்சேன். அத படிக்கறப்போ நம்ம  கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு அப்படியே  அந்தந்த லொகேஷன்ஸ்க்கு போயிட்டு இருக்குறப்போ கொஞ்சம் மலரும் நினைவுகளும் ஞாபகத்துக்கு வந்துடிச்சி. இது தான் நான் படிச்ச அந்த பாட்டு,


‘இது, தமிழ் முனிவன் வைகும்
    இயல்தரு குன்றம்; முன்நாறு
உது, வளர் மணிமால் ஓங்கல்,
    உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது, திகழ் அனந்தவெற்பு ‘என்று
    அருள்தர, ‘அனுமன் தோன்றிற்று
எது? ‘என, அணங்கை நோக்கி,
    இற்று என இராமன் சொன்னான்.

இராமனும், சீதையம்மாவும் இராவண வதம் முடிஞ்சி விமானத்துல ஏறி போறப்போ, வழியில அம்மாக்கு காட்றாரு, 'அங்க பாரு தமிழ் முனிவன் அகத்தியர் இருந்த பொதிகை மலை, இந்த பக்கம் பாரு வளர்மணிமால் ஓங்கல்' அதாவது திருமாலிருஞ்சோலை எனும் கள்ளழகர் கோவில், 'அதோ அங்கே பார் திகழ் அனந்தவெற்பு' அதாவது திருவேங்கடம் அப்படீன்னு காட்டிட்டு வர்றப்போ, சீதையம்மா 'ஹனுமனை பார்த்த இடம் எதுவோ'ன்னு கேட்க 'இது'ன்னு  ஒரு இடத்தை இராமர் காட்டினாராம். சீதையம்மா மனசுலதான் ஹனுமனுக்கு எவ்வளவு பெரிய இடம்!

இந்த காலத்துல மனுஷன் கண்டுபுடிச்சி ஓடற ஃபிளைட்டே அம்புட்டு வேகம் ஓடுதுன்னா, பகவானோட ஃபிளைட் என்ன வேகத்துல போயிருக்கும். வாயு வேகமல்ல, மனோ வேகம்...

லேபிள்கள்: , , , , ,

வியாழன், 11 ஏப்ரல், 2019

என் பட்டமே பற பற பற பற...

ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு கேள்விப்  படாதவங்க இருக்கமாட்டீங்க? அந்த காத்துல அம்மி பறக்குதோ இல்லையோ நம்ம பசங்க விடற பட்டம் (அதாங்க மெட்ராஸ் பாஷையில காத்தாடி) ரொம்ப ஜோரா பறக்கும் வானத்துல.

பட்டம்னு சொன்ன உடனே அப்படியே நான் மோட்டுவளைய பார்க்க (ம்ம்க்கும் மோட்டுவளை எங்க இருக்கு கான்க்ரீட் கூரை தான் தெரியுது!) அதாவது ஒரு பிளாஷ்பேக் எபக்ட்டுக்கு  அப்படி பார்த்தேங்க. சரி அத விடுங்க, அப்படியே ரீவைண்ட் பண்ணி போறோம்.

எங்க ஊர் தேர்முட்டி (தேரடி) பக்கத்துல நல்ல  உயரமான  ஒரு மேடை இருக்கும். அதுக்கு பக்கத்துல தான் தேர நிறுத்தி வச்சிருப்பாங்க. நல்ல பெரிய தேர், நிறைய அழகழகான சிற்ப வேலைப்பாடு நிறைந்த மரத்தேர்.  அந்த மேடை மேல ஏறினா தேர் பீடத்துக்கு ஈஸியா போயிரலாம். சரி, அது கிடக்கட்டும். ஆடி மாசம்னு வந்துட்டாலே எங்க பக்கத்துப் பசங்க எல்லாரும் கையில நூல்கண்டோட அந்த மேடை மேலதான் கூட்டமா நிப்பாங்க. எல்லாரும் பட்டம் விட்டுகிட்டு ஒரே கூச்சலும், கும்மாளமுமா இருக்கும். ஆனா இந்த மாஞ்சா கீஞ்சானு சொல்றாங்களே அதெல்லாம் ஒன்னும் தெரியாது எங்களுக்கு. பட்டமும்  காசு குடுத்தெல்லாம் எல்லாரும் வாங்க மாட்டோம், நாங்களே செஞ்சிடுவோம், ஆமா இது என்னா பெரிய கம்பசூத்திரமான்னு கேக்கறீங்களா! (ஆமா, அது கம்ப சூத்திரமா இல்ல கம்ப சித்திரமா? சூத்திரமா தான் இருக்கணும், ஏன்னா கம்ப இராமாயண பாடல்கள்ல அவ்வளவு உள்ளர்த்தங்கள் பொதிஞ்சு கெடக்கு.)

அப்பவெல்லாம் வீட்டுல ஒரே ஒரு பட்டம் வாங்க காசு தேத்தறதுக்கே படாத பாடாயிடும். சில வெவரமான பசங்க இந்த சமயத்துல நல்ல காசு பார்ப்பாங்க. ஒரு ஐம்பது காசுக்கு கலர் பேப்பர் வாங்கினா போதும் அதுல சிறுசு, பெரிசுனு அஞ்சு அல்லது ஆறு பட்டம் பண்ணிடுவாங்க, வீட்டுக்கு வெளியில ஒரு கயித்துக் கட்டில போட்டு அதுல பட்டத்தை எல்லாம் கட்டி மார்க்கெட்டிங் பண்ணி வித்துடுவாங்க. எப்படியும் ஒரு பட்டம் 25 காசுல இருந்து 1 ரூபாய் வரைக்கும் போகும், காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிதுனு கொண்டாட்டம்தான் அவங்களுக்கு. இன்னிக்கெல்லாம் 500, 1000ம் ரூபாய்க்கே மதிப்பில்ல, ஆனா அன்னிக்கு வெறும் பத்து காசுக்கு எவ்வளவோ என்ஜாய் பண்ணுவோம்!

எப்படியாவது பைசாவ தாத்தாகிட்டயோ இல்ல பாட்டிக்கிட்டயோ தேத்திட்டு போய் கலர் பேப்பர் வாங்கி பட்டம் செஞ்சிடுவோம். ஆனா ஒன்னு, அப்படி வாங்கின பட்டம் எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ள கிழிஞ்சிடும் இல்ல எங்கயாவது ஒரு வீட்டு ஓட்டுலயோ, கரண்டு கம்பத்துலையோ, இல்ல பெரிய மரத்துலயோ போய் மாட்டிக்கும். ஆசை யாரைத்தான் விட்டது! நல்லா காத்து அடிக்கும்போது பட்டம் ரொம்ப உயரமா பறக்கும், உடனே போட்டி வந்துடும் “ டேய் என் பட்டம் தான்டா வானமே தாண்டி பறக்குது”னு ஒருத்தன் கத்திட்டான்னா போதும் உடனே அடுத்தவன் நூல்கண்டு புதுசா வாங்கிட்டு வந்து நீளத்த அதிகமாக்குவான், அப்புறம் அவனும் அதே மாதிரி கத்துவான், இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிக்க கடைசியில் யாரோட பட்டமும் திரும்பி வராது. இந்த நூல்கண்டு பிரச்சினைய சமாளிக்க, நாங்க ஒரு வாரத்துக்கு முன்னாலயே குறைஞ்சது பத்து நூல்கண்டாவது வாங்கிட்டு வந்து ஒரு குச்சியில முடிச்சி போட்டு முடிச்சி போட்டு சுத்தி வச்சிடுவோம்.

பட்டம் கிழிஞ்சி போயிடிச்சினா ஓரமா போய்  உட்கார்ந்திடுவோம்னு மட்டும் நினைக்காதீங்க. பட்டம் டெக்னாலஜி தன நமக்கு நல்லா தெரியுமே. வீட்டுல கிடைக்கற பழைய செய்தித்தாள வச்சி, தென்னை இலையிலிருந்து வருமே அதுதாங்க நம்ம விளக்கமாறு (துடைப்பம்) அதுல இருந்து குச்சிய உருவி, பசையெல்லாம் போட்டு பக்காவா பட்டம் ரெடி பண்ணிடுவோம். அதுக்கு வால் வேற டிஸைன் டிஸைனா கட்டி விடுவோம், பல தாத்தாக்களோட கோவணம் அன்னிக்கு காணாம போகும். அப்புறம் என்ன, இன்னொரு முறை அதே மாதிரி போட்டிதான், காது கிழிய கத்தல் தான். ஆடிக் காத்து நிக்கற வரைக்கும் இதே வேலைதான். சில ஆர்வக் கோளாறு கேசுங்க பள்ளிக்கூடத்துக்கே பட்டத்த   எடுத்துகிட்டு வந்து, இண்டெர்வெல் நேரத்துல  பறக்கவிட்டு ஸீனப் போட்டு வாத்தியார்கிட்ட செம்ம மொத்து வாங்குங்க.

குட்டி குட்டி வாண்டூஸ்லாம் ஒரு பத்தடி நீளக் கயிறுல பட்டத்த கட்டிக்கிட்டு தெருவை சுத்தி ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்குங்க. அப்பப்பா! ஊரே ஒரே (பட்டம் கட்டி) களைக் கட்டி இருக்கும் ஆடி மாசத்துல. சில நேரத்துல பொழுது போகாத பெரியவங்களே வந்து நல்லா பறக்குற பட்டத்த பார்த்து ஆஹா ஓஹோனு பாராட்டுவாங்க பாருங்க, அப்படியே நம்மள தூக்கி அந்த பட்டத்து மேலயே உட்கார வெச்சா மாதிரி மனசும் சேர்ந்து பறக்கும்.

படிச்சு பட்டம் வாங்கத்தான் வயசு வேணுமாம், பட்டம் விடவெல்லாம் வயசு ஒரு பிரச்சினையே இல்லையாம். நாம  எந்த வயசுலயும் பட்டம் விடலாம், கிழிக்கலாம். குழந்தைகளா மாறுவோம், கும்மாளமடிப்போம், அந்த நாள் குடுத்த மகிழ்ச்சிய  இன்னிக்கும் அனுபவிப்போம்.

அதனால ஆடிக்கு எல்லாரும் ரெடியா இருங்க, கடற்கரைக்கோ, ஆத்தங்கரைக்கோ, இல்ல வெட்டவெளிக்கோ போயி பலூனெல்லாம் வாங்காம, நல்ல பட்டம் ஒன்னு வாங்கி விடுங்க. கூடவே குட்டீஸையும் கூட்டிட்டு போங்க. என் பட்டமே பற பற பற பறனு  என்சாய் பண்ணுங்க.

லேபிள்கள்: , , , , , , , ,

புதன், 10 ஏப்ரல், 2019

நமசிவாய ஞானப் பால்

ஏம்பா சம்பந்தர் மட்டும்தான்  ஞானப் பால் குடிச்சிருக்காரா? நாங்களும் குடிச்சிருக்கோம்ல. என்னடா இவன் குழப்பறானேனு பார்க்கறீங்களா? சொல்றேன் மேல படிங்க...

நான் சின்னப் பையனா இருக்கும்போது அதாவது ஒரு நாலாங்கிளாஸ் இல்ல அஞ்சாங்கிளாஸ் படிச்சிட்டு இருக்குறப்போ, 'பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு' கேக்காதீங்க,  அந்த கால கட்டத்துல சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். திருடன் - போலீஸ், பச்ச குதிரை, கண்ணாமூச்சினு எக்கச்சக்கமா விளையாடுவோம். அங்க ஒரு யாளியோட வாய்க்குள்ள கல்லால செஞ்ச மொழு மொழு பால் அதாங்க பந்து ஒன்னு இருக்கும், அதைய வெளில எடுக்க பல வருஷமா நாங்க செஞ்ச முயற்சியால இன்னிக்கு அந்த யாளிய பாவம் இரும்பு கம்பி  சிறைக்குள்ள வெச்சிட்டாங்க. 'ஏன்யா எதோ ஞானப் பால்னு சொல்லிட்டு, கல்லு பால், பந்துனு சொல்லிட்டு'னு நீங்க கேட்கறது காதுல விழுது. அப்படி விளையாடறப்போ, சில நாள் திடீர்னு கோயில் குருக்கள் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, “டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா”னு. கூப்பிட்டதும் ஓடிப்போய் கைய ட்ரவுசர், சட்டையில துடைச்சிகிட்டு, பவ்யமா வாங்கி ரசிச்சி குடிச்சி, மிச்சம் இருந்தா மறுபடியும் கேட்டு வாங்கி குடிச்சிட்டு அங்கேயே கோயிலுக்குள்ளே கிணத்துல கைய கழுவிட்டோ இல்ல ட்ரவுசர்ல துடைச்சிட்டோ விளையாட போயிருவோம். அப்படி காலம் ஓடிட்டு இருக்க ஒரு நாள்  ”என்ன சாமி இன்னிக்கு விசேஷம்”னு ஒரு பையன் கேட்டுட்டான்! “இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால், ஓம் நமசிவாயனு சொல்லிக்கிட்டே குடிங்க கடவுள் நல்ல புத்தியும், படிப்பும் கொடுப்பார்”னு குருக்கள் சொன்னாரு.  'அடடா,! இது தெரியாம சும்மாவே கைய நக்கிட்டு போயிட்டு இருந்தோமே இத்தனை நாள்னு ஒரு ரெண்டு செகண்ட் கவலைப்பட்டுட்டு மறுபடியும் விளையாட போயிட்டோம். சும்மா சொல்லக் கூடாதுங்க, ஏலக்காய், வெல்லம்லாம் போட்டு பால் ஜம்முனு ரொம்ப சுவையா இருக்கும். ஹும், நினைச்சாலே இப்பவும் நாக்கு ஊறுது.

இதெல்லாம் நடந்தது முப்பது வருஷத்துக்கு முன்னால, அப்போ எல்லாம் பிரதோஷத்துக்கு இப்போ வர்றமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க, அவங்க கூட பிரதோஷத்துக்குனு வந்திருப்பாங்களா தெரியாது. பல கோவிலுக்கு பிரதோஷத்துக்கு இப்போ போறேன், ஆனா இன்னிக்கு எந்த கோயில்லயும் அன்னிக்கு குடுத்தா மாதிரி ஞானப்பால் குடுக்கறதா தெரியல. அபிஷேகம் எல்லாம் கழிவா விட்டுடறாங்க. அதுமட்டுமில்லாம  இன்னிக்கு பிரதோஷத்துக்கு வர்ற கூட்டத்துக்கு, அதெல்லாம் விநியோகிக்கறதும் ரொம்ப கஷ்டமாயிடும்.

அதே காலகட்டத்துல, ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீன்னு ஆவின் பால்ல பாக்கெட் ஒன்னு வந்துச்சி. அது கூட கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும் ஆனா என்ன வெல்லத்துக்கு பதிலா சக்கரை போட்டிருக்கும். நெறையதடவ குடிச்சிருக்கேன் அதையும். எங்கேயாவது ஆவின் கடைய பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இப்பவும் என் கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், வெல்லம் போட்ட பால், இறைவன் ஆசீர்வாதத்தோட, குருக்களோட அன்போட கலந்து என்ன சுவையா இருந்திருக்கும்னு, அப்புறம் நீங்களும் தேடுவீங்க.

லேபிள்கள்: , , , , ,

தேப்பெருமாநல்லூரில் பிரதோஷம், ஓர் இனிய அனுபவம்

ஐயாறப்பர் ஆலயமும், அங்கு நடக்கும் பிரதோஷ வழிபாடும் என்றாலே எனக்கு அலாதி பிரியம். அப்படி இருக்க, சமீபத்தில் நான் சென்ற  தேப்பெருமாநல்லூர் விசுவநாதசுவாமி ஆலயத்தின் பிரதோஷ வழிபாடு வித்தியாசமானதொரு அனுபவத்தை கொடுத்தது. மற்ற ஆலயங்கள் போலவே நந்திக்கும், நாதனுக்கும் அபிஷேகங்கள் நடந்து முடிந்ததும், சற்று வித்தியாசமாக தீபாராதனைக்கு முன் குருக்கள் மைக்கை எடுத்துக்கொண்டு மேடை ஏறுகிறார். அவ்வாலயத்தின் சிறப்பையும், பிரதோஷத்தின் மகிமையையும் விளக்கி கூறிவிட்டு, சுக்லாம்பரதரத்தில் ஆரம்பித்து அத்தனை ஸ்லோகங்களையும் அவர் சொல்லச் சொல்ல மக்களையும் உடன் சேர்ந்து சொல்லச் சொல்லி அதற்கான விளக்கமும் கூறுகிறார். குறைந்தபட்சம் ஒரு 250 பேராவது இருந்திருப்பார்கள் அச்சமயம். அத்தனை மக்களும் ஒன்றாக சேர்ந்து உச்சரித்த மந்திர கோஷத்தால் மயிர்கூச்செறிய வைக்க நடந்த தீபாராதனையை காண ஏகப்பட்ட புண்ணியம் செய்திருக்க வேண்டும். அங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு பிரதோஷ தினத்தன்று ருத்திராக்ஷ கவசம் அணிவித்து, ருத்திராக்ஷத்தால் அர்ச்சனை செய்து அந்த ருத்ராக்ஷத்தை பிரசாதமாகவும் பக்தர்களுக்கு தருகிறார்கள் (பெண்கள் மற்றும் சிறுவர்கள்  தவிர). இந்த ஆலயத்தின் இறைவன் ருத்திராக்ஷேஷுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். மற்ற நாட்களில் அந்த கவசம் கருவறைக்கு அருகில் இருக்கும் மற்றொரு அறையில் வைக்கப்படுகிறது. வழிபாடு முடிந்ததும் வந்த அத்தனை பேருக்கும் மிக மிகப் பிரமாதமான அன்னதானம் வழங்கப்படுகிறது. சக்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று அவ்வளவு பேருக்கு எப்படித்தான் அவ்வளவு சுவையாக செய்தார்களோ!

பழைய சோறு படைக்கப்படும் அன்னதான தக்ஷிணாமூர்த்தி, கபால கணபதி, சமீபத்தில் ஒரு நாகம் வில்வத்தை இறைவன் மீது வைத்து வழிபட்ட சம்பவம், சனிபகவான் இறைவனை பிடிக்க வந்தது, ப்ரளயகாலத்தில் உலகமே மூழ்கியபொழுது இந்த ஆலயம் மட்டும் மூழ்காதது, நம்முடன் பேசுவது போல் உதடுகள் குவிந்த அம்பாள் என்று மேலும் பற்பல சிறப்புகள் கொண்ட ஆலயம்.  

முக்கியமான ஒன்று, மறுபிறவி இல்லாதவருக்கு தான் இந்த இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

லேபிள்கள்: ,