தாராசுரம் ஐராவதேசுவரர் ஆலயம் (Tharasuram Iravateshvarar Temple)
பழையாறை, நந்திபுரம், இராசராசபுரம் என்றழைக்கப்பட்ட தாராசுரம், தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 37 கி.மீ (கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ) தொலைவில் உள்ள அழகிய ஊர். சுந்தரசோழர் காலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்த பழையாறையை சில தலைமுறைகளுக்குப் பிறகு புதுப்பித்து விரிவாக்கம் செய்தார் இரண்டாம் இராசராசன் (1147-1173). இவரது பெயராலேயே இராசராசபுரம் என்றழைக்கப்பட்ட ஊர் இன்று தாராசுரம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இங்கு பசுமையான, அமைதியான சூழலில் அமைந்திருக்கும் ஆலயம் ஐராவதேசுவரர் ஆலயம். அற்புதமான சிற்பங்களுடைய இந்த ஆலயம் மேற்குறிப்பிட்ட இரண்டாம் இராசராசனாலேயே எழுப்பப்பட்டது. 2004 - ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாய் அறிவிக்கப்பட்ட இந்த ஆலயம் பிற்காலச் சோழர் சிற்பக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதோ ஆலயம் தங்கள் கண் முன்னே...
ஆஹா! என்னவொரு பசுமையான சுற்றுப்புறச் சூழல்





இசையின் ஏழு ஒலிகளை எழுப்பும் படிகள், ஒரு நாணயத்தை முதல் படியிலிருந்து விழச் செய்தால் அது ஒவ்வொரு படியில் விழும்போதும் ஒருவித ஒலியை எழுப்பும். இதை சோதித்து சோதித்து சுரண்டிவிட்டனர் கலை ஆர்வம் மிக்க நம்மவர்கள், இதனாலேயே சிறை வைக்கப் பட்டுவிட்டது இன்று.

இதே போன்ற யாளி வரிசைகளை தஞ்சை மற்றும் திருவையாறு ஆலயங்களிலும் காணலாம்.

ஒவ்வொரு படியிலும் உள்ள சிறிய சிற்பங்களை கவனிக்கவும்
கோவிலின் உட்புறத் தோற்றம், இரத மண்டபம் மற்றும் விமானம்










ஆஹா! அற்புதமான குரு தரிசனம் அதற்குப் பிறகு சுவைமிகுந்த சக்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் சுண்டல். சும்மா சொல்லக் கூடாதுங்க பிரசாதம் ரொம்பப் பிரமாதம், இது மாதிரி பிரசாதத்த எங்கயும் சாப்பிட்டதில்லீங்க...

பிரசாதம் சாப்பிட்டு வயிறு நிறைஞ்சிடுச்சா, இந்த மாதிரி உடம்ப வளைச்சி ஒரு ஆட்டம் போடுங்க எல்லாம் சீரணமாயிடும்

கீழே உள்ள படங்களைப் பாருங்கள், ஆலயத்தின் உள்ளே திருப்பணி நடக்கிறது. நல்ல விஷயம்தான் ஆனால் கற்களையும், குப்பைகளையும், சிமெண்ட் பைகளையும் சிற்பங்களின் மேலே போடுவது நியாயமா? 900 ஆண்டுகள் கடந்தும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும், நம் முன்னோர்களின் சிறப்பை பறை சாற்றும் பொக்கிஷங்களை காப்பதை விட்டுவிட்டு அதை அழிக்கலாமா? ஏற்கனவே காற்றாலும், மழையாலும் சிதைந்து கொண்டிருக்கும் சிற்பங்களை மென்மேலும் நாம் சிதைக்கலாமா?

இன்று தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் நம்மால் கான்கிரீட்டில் கூட சரியாக செய்ய முடியாத சாளரங்களை கல்லினால் எவ்வளவு அழகாக செதுக்கியுள்ளார்கள்!

இது தல விருட்சம், வில்வ மரம். அதன் பின்னே உள்ள சிற்பத்தை கீழே உள்ள படத்தில் பாருங்கள்

ஒரே தலை ஆனால் இரண்டு உருவம், காளை மற்றும் யானை. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிற்பம், சிற்பியின் கலைத் திறனை என்னவென்று போற்றுவது!
இது அருகில் உள்ள அம்மனின் ஆலயம்


மேல் உள்ள படங்களில் உள்ளது போலவே ஐராவதேசுவரர் ஆலயத்திலும் நீர் இருந்து அதை குருபெயர்ச்சி விழாவின் பொருட்டு வெளியேற்றியதாக அவ்வூரைச் சார்ந்தவர் தெரிவித்தனர். தரைமட்டத்திலிருந்து சுமார் ஐந்தடி உயரம் தாழ்வாக கட்டப்பட்டிருக்கும் ஆலயமான இங்கு நிச்சயம் அந்த நீர் வடிவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். காரணம் இன்றிருந்ததை விட பலநூறாண்டுகளுக்கு முன் பெய்த மழையின் அளவு அதிகம், மேலும் ஒவ்வொரு சிற்பத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியவர் நிச்சயம் அதை காப்பதற்கான வழியையும் செய்திருப்பர். அதை கண்டறிந்து சீர் செய்ய வேண்டும், நம் முன்னேர்கள் விட்டுச் சென்ற வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க வேண்டும்.இங்குள்ள சிற்பங்களையும், அதன் பின்னனி கதையையும் அறிய ஆர்வமிருந்தால் இங்கே சுட்டவும்
http://www.poetryinstone.in/lang/ta/tag/darasuram
லேபிள்கள்: ஐராவதேசுவரர் ஆலயம், தாராசுரம், iravatheshwarar, tharasuram








