செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மை ஃபர்ஸ்ட் ஃபிளைட் & இராமர்-சீதை ஃபிளைட்

ஃபர்ஸ்ட்டு  ஃபர்ஸ்ட்  நான்  ஃபிளைட்ல  பறந்தது சென்னை டூ திருச்சி டூ துபாய். சென்னையில இம்மிக்ரேஷன் முடிஞ்சதும் இப்படி எல்லாரையும் விட்டுட்டு தனியா கெளம்பி போறோமேனு சோகம் ஒரு பக்கம், மொத மொதல்ல  ஃபிளைட்ல  பறக்கப் போறோம்னு சந்தோசம் இன்னொரு பக்கம்.  எப்படியோ ஒரு வழியா சமாளிச்சு வண்டியில ஏறிப் பார்த்தா, ஜன்னல் சீட்டுக்கு பக்கத்துக்கு சீட்டு என்னோடது. கொஞ்சம் ஏமாந்துதான் போயிட்டேன். யாராவது அந்த ஜன்னல் சீட்டுக்கு வந்துடுவாங்களோன்னு ஜன்னலையும், வாசலையும் மாறி மாறி பார்த்துகிட்டே பதினஞ்சு நிமிஷம் சோகம் மறந்து இருந்தேன். அப்புறம் கதவ மூடறத்துக்கு அனவுன்ஸ்மென்ட் வந்தப்புறம் தான், அப்பாடா யாரும் வரலைன்னு நிம்மதியா ஜன்னல் சீட்டுக்கு ஜம்ப் ஆனேன்.

சென்னையில இருந்து வண்டி டேக் ஆ ஃப் ஆகி, கிண்டிய தாண்டி, சைதாப்பேட்டை தாண்டி கொஞ்ச தூரத்துல ஒரு யூ டர்ன் அடிச்சி வடபழனி, கோயம்பேடுனு வரிசையா ஆர்வமா பார்த்துட்டே போறேன், காடு, கழனி எல்லாம் தாண்டி  கொஞ்ச நேரத்துல சிட்டி மாதிரி ஒரு ஏரியா தெரிஞ்சுது. அட அதுக்குள்ள காஞ்சிபுரமா அதுக்கு பக்கத்துல ஒரு ஆறு தெரியுதே, பாலாறா இருக்குமோனு நினைக்கறதுக்குள்ள  'திருச்சி வந்தாச்சு லேண்ட் ஆகப் போகுது'னு அனவுன்ஸ்மென்ட் வருது... அப்போ நான் பார்த்தது கொள்ளிடமான்னு ஆச்சரியப்பட்டுகிட்டே லேண்டிங்க்கு ரெடியானேன்.

இந்த கதை இப்போ எதுக்குன்னு கேட்கறீங்களா? இன்னிக்கு எதேச்சையா கம்பராமாயணம் பாட்டு ஒன்னு படிச்சேன். அத படிக்கறப்போ நம்ம  கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு அப்படியே  அந்தந்த லொகேஷன்ஸ்க்கு போயிட்டு இருக்குறப்போ கொஞ்சம் மலரும் நினைவுகளும் ஞாபகத்துக்கு வந்துடிச்சி. இது தான் நான் படிச்ச அந்த பாட்டு,


‘இது, தமிழ் முனிவன் வைகும்
    இயல்தரு குன்றம்; முன்நாறு
உது, வளர் மணிமால் ஓங்கல்,
    உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது, திகழ் அனந்தவெற்பு ‘என்று
    அருள்தர, ‘அனுமன் தோன்றிற்று
எது? ‘என, அணங்கை நோக்கி,
    இற்று என இராமன் சொன்னான்.

இராமனும், சீதையம்மாவும் இராவண வதம் முடிஞ்சி விமானத்துல ஏறி போறப்போ, வழியில அம்மாக்கு காட்றாரு, 'அங்க பாரு தமிழ் முனிவன் அகத்தியர் இருந்த பொதிகை மலை, இந்த பக்கம் பாரு வளர்மணிமால் ஓங்கல்' அதாவது திருமாலிருஞ்சோலை எனும் கள்ளழகர் கோவில், 'அதோ அங்கே பார் திகழ் அனந்தவெற்பு' அதாவது திருவேங்கடம் அப்படீன்னு காட்டிட்டு வர்றப்போ, சீதையம்மா 'ஹனுமனை பார்த்த இடம் எதுவோ'ன்னு கேட்க 'இது'ன்னு  ஒரு இடத்தை இராமர் காட்டினாராம். சீதையம்மா மனசுலதான் ஹனுமனுக்கு எவ்வளவு பெரிய இடம்!

இந்த காலத்துல மனுஷன் கண்டுபுடிச்சி ஓடற ஃபிளைட்டே அம்புட்டு வேகம் ஓடுதுன்னா, பகவானோட ஃபிளைட் என்ன வேகத்துல போயிருக்கும். வாயு வேகமல்ல, மனோ வேகம்...

லேபிள்கள்: , , , , ,