வெள்ளி, 15 மே, 2009

ஸ்தபதி திரு. உமாபதி ஆச்சார்யா அவர்களுடன் ஒரு சந்திப்பு

கல்கியின் வாசகர்கள் யாவருக்கும் சிற்பி என்ற உடனே நினைவுக்கு வருவது ஆயனச் சிற்பியும் அவரது மல்லைக் கனவுகளும்தான். சிவகாமியின் சபதத்தில் சிற்பக் கலைக்கும், நாட்டியக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கல்கி பொன்னியின் செல்வனில் சோழர்களின் பெருமையையும், இராஜராஜ சோழனின் கலைத் தாகத்தையும் யாவரும் அறியும் படிச் செய்தார். பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து காவிரி மைந்தன் எழுதிய அனுஷாவெங்கடேஷ், சிவகாமியின் சபதத்தை தொடர்ந்து காஞ்சி என்ற ஒரு நாவல் எழுதுவதாக கேள்வி. கல்கி முடிக்காமல் விட்டுச் சென்ற ஆயனச் சிற்பியின் கனவுகளை இவர் நிறைவேற்றுகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். கல்கியின் எழுத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு உருவான பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் இணைந்திருக்கும் நாங்கள், பல்லவர்களும், சோழர்களும் வளர்த்து வந்த சிற்பக் கலையை சாதாரண மக்களும் அறிந்து போற்றச் செய்யவேண்டும் என்று செய்து வரும் முயற்சியில் உருவான ஒன்று இந்த சந்திப்பு.

கல்லிலே கலை வண்ணம் காட்டும் நண்பர் சிங்கை திரு. விஜயகுமார் (VJ) அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் பாரம்பரியம் மிக்க ஸ்தபதி திரு. உமாபதி ஆச்சார்யா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழக இனிமையான இவர், பரம்பரை பரம்பரையாய் தாங்கள் கற்று வரும் சிற்பக் கலையின் இரகசியங்களை, சிற்பங்கள் செதுக்கும் முறையை யாவரும் அறிய வேண்டும், இந்தக் கலையின் முக்கியத்துவத்தை உலகம் அறிய வேண்டும் என்று ஆவல் கொண்டு இந்தப் பேட்டியினை மனமுவந்து அளித்துள்ளார். அமைதியும் பக்தியும் தவழும் இவரது இல்லத்தில் நுழைந்த உடனேயே நாம் புனிதமானதொரு இடத்தில் இருக்கிறோம் என்று உள்மனது அறிவித்தது. அவரும் அவரது சகோதரர் திருவீழிநாதனும் பேசிய விதமும், அவர்களது ஓலைச் சுவடிகளையும், நூல்களையும் பாதுகாக்கும் விதமும், அவர்களது தொழில் கூடத்தை வைத்திருக்கும் விதமும் அதை மெய்பிப்பதுபோல் இருந்தது.

சிற்பசாஸ்திரம், சிற்பங்கள் செதுக்கும் முறை, சிற்பங்கள் செதுக்குவதற்கு முன் தயார் செய்யப்படும் ஓவியங்கள் ஆகியவற்றைப் பற்றி பல ஆச்சர்யமூட்டும் தகவல்களை நம்முடன் பரிமாறிக்கொண்டார். கற்சிற்பங்கள் மட்டுமின்றி உலோகத்தில் சிற்பங்கள் செய்வதிலும் தேர்ந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன் இந்த சந்திப்பில். மேலும் சிற்ப சாஸ்திரம் சம்பந்தப் பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார், இவர் ஆராய்ச்சிகள், தேடல்கள் வெற்றி பெற வேண்டும் அதனால் இந்தக் கலையின் மகத்துவத்தை உலகோர் யாவறும் அறிந்து பயன் பெறவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு யாம் பெற்ற இன்பத்தை யாவரும் பெறவேண்டுமென இந்த வீடியோப் பதிவினை வழங்குகிறோம்.

பார்த்து மகிழுங்கள், மேலும் தங்களுக்கு சிற்பக் கலையில் இருக்கும் சந்தேகங்களை தவறாமல் எங்களுக்கு அனுப்புங்கள். தங்களுடைய வினாக்களை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் திரு. உமாபதி ஆச்சார்யா அவர்கள்.

Email : svprsk@gmail.com

பாகம் - 1


பாகம் - 2


பாகம் - 3


பாகம் - 4

லேபிள்கள்: , , , , , , , , , ,