வியாழன், 3 ஜூலை, 2008

அமீரகத்தில் ஒரு வருடம்

என் வாழ்க்கையில் நான் வெளிநாடு செல்வேன் என்று எப்பொழுதும் நினைத்ததில்லை, இருந்தும் நானும் ஒரு முறை வெளிநாடு செல்ல வேண்டி வந்தது அது கடந்த 2007 – ஆம் ஆண்டு ஜூன் மாதம், நான் சென்ற இடமோ அபு தாபி . அங்கு இருந்த ஒரு வருடத்தில் நான் பெற்ற அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ஏனெனில் இது அங்கு போகவிருக்கும் பல பேருக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கோடு! வாருங்கள் செல்வோம் வளைகுடா நாட்டிற்கு.


நம் நாட்டில் இன்று மட்டும் அல்ல ஆதி காலம் முதலே வாழ்வில் பணபற்றாக்குறை வரும்பொழுதோ அல்லது மேலும் செல்வம் சேர்க்கவோ பட்டணம் செல்வதும் வெளிநாடு செல்வதும் நடைமுறையில் இருந்திருக்கிறது இன்றும் இருக்கிறது. நிகழ்காலத்தில் பெரும்பான்மையோர் செல்வது வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகளுக்கும் மக்கள் செல்கிறார்கள் ஆனாலும் அதிக மக்கள் செல்வது மேற்சொல்லப்பட்டிருக்கும் மூன்று நாடுகளுக்குத்தான் அதிலும் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம் ஏனெனில் அங்கு வருமான வரி கிடையாது மேலும் அங்கு வேலை வாய்ப்பும் மற்ற நாடுகளை காட்டிலும் மிக அதிகம்.


நான் அபு தாபியில்(Abu Dhabi) இருந்த ஒருவருட காலத்தில் அருகில் உள்ள துபாய் (Dubai), சார்ஜா(Sharjah), அல் எய்ன்(Al Ain), ஃபுஜைரா (Fujairah) போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன் அங்கு என்னுடைய நண்பர்களும் பல பேர் வசிக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் சில வேறுபாடுகள் உண்டு அவை என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம் ஆனால் எல்லா இடத்திற்கும் பொதுவான ஒன்று இயந்திரத்தனமான வாழ்கை! ஒரு வெள்ளிகிழமையிலிருந்து இன்னொரு வெள்ளிக்கிழமை எவ்வாறு வருகிறதென்று யாருக்கும் தெரியாது! அவ்வளவு வேகமான வாழ்க்கை! உண்மையில் எனக்கு ஒரு ஆண்டுகாலம் எப்படி சென்றதென்றே தெரியவில்லை! ஆனால் என் குடும்பத்தினர் நான் இல்லாததால் அந்த ஒரு ஆண்டுகாலத்தையும் மிகவும் சிரமத்துடன் கழித்ததாக கூறினார்கள்.


முதலில் நான் இருந்த அபு தாபியை பற்றி பார்ப்போம். அபு தாபி ஐக்கிய அரபு நாடுகளின் (United arab Emirates) தலை நகரம், இது தலைநகரமாக இருப்பினும் அருகில் உள்ள துபாயை விட வளர்ச்சியில் சற்று குறைவுதான். கட்டிட மற்றும் வணிக வளர்ச்சியில் மட்டும்தான் குறைவு ஆனால் நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் அபு தாபி தான் பெரியது. இங்குள்ள மக்கள்தொகை துபாயை விட குறைவு ஆனாலும் உள்ளூர் மக்கள் அதிகம், இந்த அமீரகத்தில் (Emirate) மட்டும்தான் விமானப்படை உள்ளது. அபு தாபியின் வாழ்க்கையும் இயந்திரத்தனமானதுதான் ஆனாலும் சற்றே பரபரப்பு குறைவு துபாயை விட. இங்கு இருக்கும் நல்ல விஷயங்கள் என்ன என்னவென்று பார்த்தால் இந்த ஊரில் எங்கு போக வேண்டுமானாலும் நடந்தே சென்று விடலாம், ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு போகவேண்டும் என்றால் மட்டும் வாடகை மகிழுந்துகளில் செல்லலாம், மகிழுந்துகட்டனம் நம்மூர் தானி (ஆட்டோ) கட்டணத்தை விட குறைவுதான். இங்கு இரண்டு வகையான மகிழுந்துகள் உண்டு, ஒன்று Camry போன்ற அதிசொகுசு மகிழுந்துகள் இதில் வாடகை அதிகம் மற்றொன்று corolla போன்ற மகிழுந்துகள் இதில் கட்டணம் குறைவு. ஆனாலும் இங்கு இருக்கும் மக்களுக்கு பணத்திற்கு குறைவு இல்லையாதலால் நம் மக்கள்கூட அங்கு சென்ற குறுகிய காலத்திலேயே ஒரு மகிழுந்துவை சொந்தமாக வாங்கிவிடுவர்! இங்கு மகிழுந்துவின் விலை மிகவும் குறைவுதான் நம் நாட்டில் இருப்பதை விட, உதாரணத்திற்கு நம் ஊரில் Honda Civic வாங்கவேண்டுமேனில் குறைந்தது 12 இலட்ச ரூபாயாவது வேண்டும் ஆனால் இங்கு 56000 திராம்களுக்கே கிடைக்கும், காரணம் இங்கு வரிகள் ஏதும் கிடையாது!


இங்கு இருக்கும் கடற்கரை மிகவும் அழகாக இருக்கும் இதனை மரினா கடற்கரை என்றுதான் சொல்வார்கள் (சென்னையிலும் மெரினா தான்) இந்த கடற்கரைக்கு செல்லும் முன் வழியில் ஒரு அரண்மனை போன்ற நட்சத்திர தங்கும் விடுதி இருக்கும் அதனை பேலஸ் ஹோட்டல் (Palace Hotel) என்று சொல்வார்கள். இது இரவு நேரத்தில் பார்ப்பதற்கு வண்ண விளக்குகளுடன் மிகவும் அழகாக இருக்கும். மேலும் கார்நீச் எனப்படும் கடலோர சாலையும் இருக்கிறது, இங்கு கடற்கரை இருக்காது அதற்கு மாற்றாக அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட corniche தான் இருக்கும். இந்த சாலைக்கு ஒருபுறம் கடலும் மற்றொரு புறம் புல்வெளியும் இருக்கும், இங்கு காலையிலும் மாலையிலும் மக்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் வருவார்கள். இந்த இடங்களை விட்டால் வேறு பொழுதுபோக்கு திரைப்படம் மற்றும் shopping mall எனப்படும் விற்பனை வளாகங்கள்தான், இவைகளுக்குள் சென்றால் நேரம் செல்வதே தெரியாது அவ்வளவு பெரிய கட்டிடங்கள் பெரிய பெரிய கடைகள் புதிய புதிய பொருட்கள் பார்க்கலாம் பார்க்கலாம் பார்த்துகொண்டே இருக்கலாம், முடிந்தால் வாங்கலாம்.

இந்த ஊரில் பலதரப்பட்ட நாட்டவர்கள் இருந்தாலும், இந்தியர்களும் பிலிபைன் (philipine) நாட்டவரும் அதிகம். இந்தியர்களுள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மிக அதிகம், இது அனைவருக்கும் தெரிந்ததே! இங்குள்ள கேரளா மாநிலத்தவருக்கு இந்த நாட்டில் உள்ள அனைத்தும் அத்துப்படி இவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியராக இருப்பினும் பெரும்பாலானோர் நல்ல சகோதரத்துவத்துடன் பழகுவார்கள். இருந்தாலும் இவர்களிடம் சற்று கவனமாக இருப்பதே நல்லது!

இந்த ஊரில் இருக்கும் குறைகள் என்னவென்று பார்த்தால்; இங்கு பணப்பஞ்சம் இல்லை அதை தவிர மற்ற அனைத்தும் பஞ்சம் தான், உதாரணத்திற்கு இங்கு வாழ்பவர்களுக்கு குடியுரிமை கிடையாது, நூறு ஆண்டுகள் இருந்தாலும் சரி அங்கேயே குழந்தை பிறந்தாலும் சரி நீங்கள் வேற்றுநாட்டவர்தான். தொலைபேசியில் உங்கள் உற்றார் உறவினருடன் பேசுவது என்றால் ஒரு நிமிடத்திற்கு 30 ரூபாய் செலவாகும், இதுவே இணைய ஒலி (VOIP- Voice over Internet protocol i.e. Inernet telephone) வழியாக பேசினால் 3 ரூபாய் தான் ஆகும் ஆனால் அவையெல்லாம் இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று. இதற்கு காரணம் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் அரசின் வசமுள்ளதே! மிகவும் சிக்கலான செலவு அதிகம் ஆகும் ஒன்று வீடு! குடும்பத்துடன் செல்கிறீர்களா முடிந்தவரை வீடு வசதி தரும் நிறுவனங்களை பார்த்து செல்லுங்கள் இல்லையேல் உங்கள் பாடு திண்டாட்டம் தான்! ஒரு படுக்கை அறை உடைய அடுக்கு மாடி இருப்பிடத்திற்கு நீங்கள் ஒரு இலட்சம் திராம்கள் வரை கொடுக்க வேண்டி இருக்கும், இதனை ஒரு தவணையாகவும் கொடுக்கலாம் அல்லது மூன்று தவணைகளாகவும் கொடுக்கலாம். நீங்கள் குடும்பம் இன்றி தனியாக செல்கிறீர்களா? அப்படியெனில் ஓரளவுக்கு சமாளிக்கலாம், உங்களுக்கு 1000 திராம் முதல் 1500 திராம்களுக்குள் 2 அல்லது மூன்று பேருடன் தங்கும் அறை கிடைக்கும்(on sharing basis). ஆனால் நீங்கள் குடும்பத்திற்கானாலும் சரி தனியாளானாலும் சரி சிரமப்பட்டு தேடவேண்டியிருக்கும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள் . நீங்கள் சென்ற ஆறு மாதத்திற்குள் அனைத்து நெளிவு சுளிவுகளையும் கற்றுகொள்ளவேண்டுமேனில் நல்ல ஒரு கேரளா நண்பரை பிடியுங்கள் பிறகு நீங்கள் மற்றவருக்கு வழி காட்டலாம்.


உணவு இங்கு ஒரு பிரச்சினை இல்லை, இங்கு உணவகங்கள் ஏராளமாக இருக்கும், அங்கு நான் இருக்கும்பொழுது எல்லாம் விலை அதிகமாக இருக்கிறது என்று புலம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் இங்கு சென்னை வந்த பிறகுதான் தெரிகிறது அங்கு இருக்கும் விலை ஒன்றும் பெரிதல்ல என்று. உதாரணத்திற்கு ஒரு தோசை அங்கு 3.50 திராம் முதல் 5 திராம் ஆனால் இங்கு ஒரு தோசை 25 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது, சமீபத்தில் தமிழக அரசே தலையிட்டு உணவு விலைகளை குறைக்க சொன்னது நினைவிற்கு வருகிறது. நாம் அங்கு வாங்கும் ஊதியத்தை வைத்து பார்த்தால் அங்கு விற்கப்படும் விலை மிகவும் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.


Dubaai; துபாயில் அதிக ஆடம்பரம் உண்டு மேலும் இங்கு வாழ்வது சற்றே கடினமாகிகொண்டு வருகிறது, இங்கு உள்ளூர் மக்களை விட வெளிநாட்டு மக்கள் தொகை அதிகம் அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் மேன்மேலும் இங்கு வரும் மக்கள் எண்ணிகையும் அதிகம்! துபாய் மற்ற நகரங்களை காட்டிலும் மிகவும் பரபரப்பான ஊர், இங்கு வாழும் மக்களுக்கு அபு தாபியின் வாழ்க்கை பிடிக்காது, அதேபோல் அபு தாபியில் இருப்பவர்களுக்கும் இங்கு வாழ பிடிக்காது. இங்கு பேருந்து வசதிகள் உண்டு ஆனால் பணிக்கு செல்லும் மற்றும் பணி முடியும் நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் அந்த நேரங்களில் வாடகை மகிழுந்து கிடைப்பதும் மிகவும் கடினம். இதனால் இங்குள்ள மக்கள் ஒன்று பணியிடத்திற்கு மிக அருகாமையில் இருப்பார்கள் அல்லது மகிழுந்து வாங்கிக்கொள்வார்கள். வாகனம் வாங்குவது பெரியதல்ல அதற்குமுன் ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும் அதற்கு 5000 திராம்களுக்கும் மேல் செலவாகும் அதுமட்டும் அல்ல அவர்கள் வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக கடினம் என்று கூறுவார்கள். மற்றொரு தொல்லை வாகனம் நிறுத்தும் இடம் (Parking), ஒரு இடத்திற்கு செல்ல 15 நிமிடங்கள் ஆகுமென்றால் அங்கு வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் தேடுவதற்கும் குறைந்தது 15 நிமிடங்களாவது பிடிக்கும்! அதுமட்டும் அல்ல அனைத்தும் கட்டணம், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருநிமிடம் தாமதமானாலும் போதும் உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் அபராத சீட்டு சொருகப்பட்டிருக்கும்.

அபுதாபியை போல இங்கும் நிறைய வணிக வளாகங்கள் உண்டு, இங்கு உள்ளவை மிகவும் பிரமாண்டமாகவே இருக்கும்! வருடம் ஒருமுறை பல்வேறு நாடுகள் பங்கேற்கும் Dubai Shopping festival நடக்கும், ஏராளமான மக்கள் வருகை தரும் இதில் அனைத்து நாடுகளின் பிரபலமான பொருள்கள் இடம்பெற்றிருக்கும். இது ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நடக்கும். ஆகஸ்ட் மாதத்தில் GITEX எனப்படும் மின் மற்றும் மின்னணு சாதன கண்காட்சி நடக்கும், இதில் கைபேசி (Mobile phone), மடி கணினி (laptop), போன்ற பொருள்களின் விற்பனை அமோகமாய் இருக்கும். இந்த கண்காட்சியில்தான் அந்த வருடத்திற்குன்டான புதிய பொருள்கள் அறிமுகம் செய்யப்படும், மேலும் பொருள்கள் வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளும் கிடைக்கும்.

இங்கு ஜுமைரா கடற்கரை மிகவும் அழகான ஒன்று, இதன் அருகில் தான் உலகின் பிரசித்தி பெற்ற ஒரு 7 நட்சத்திர விடுதி Burj al Arab உள்ளது. இதனை சுற்றி பார்க்க அனுமதி உண்டு, இதற்கான கட்டணம் 250 திராம்கள். மேலும் உலகின் மிக பெரிய கட்டிடமான Al burj Tower –ம் இங்குதான் கட்டபட்டுகொண்டிருக்கிறது.

துபாயில் பொழுது போக்கிற்கு பஞ்சம் இல்லை, பணமிருந்தால்.

வீடு வாடகை பிரச்சினை அபு தாபியில் குறிப்பிட்டது போல் இங்கும் உண்டு, ஆனால் வாடகை இங்கு சற்றே கூடுதலாக இருக்கும்.

ஷார்ஜா; இது அபுதாபி மற்றும் துபாயை விட சிறிய ஊர். இங்கும் உள்ளூர் வாசிகள் அதிகம், இருப்பினும் நம்மவர்களும் இங்கே ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்குள்ளவர்களில் நிறைய பேர் துபாயில் வேலை செய்பவர்களாக இருப்பர். இங்கிருந்து துபாய் அருகாமையில் என்பதாலும் இங்கு வீட்டிற்கு வாடைகை குறைவு என்பதாலும் இங்கு வந்து குடியேறுபவர்கள் அதிகம். ஆனால் இன்று வாகன நெருக்கடி மிகவும் இவர்களை வாட்டுகிறது, அரை மணிநேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு இவர்கள் செல்ல ஆகும் நேரம் 2 மணி நேரம். மேலும் பாதையில் ஏதேனும் சிக்கல் அல்லது விபத்து நேர்ந்தால் நான்கு மணிநேரமும் ஆகலாம் 6 மணிநேரமும் ஆகலாம்.

எவ்வளவோ நிறைகள் குறைகள் பற்றி பேசியாயிற்று ஆனால் இன்னும் நினைத்தால் ரத்தக்கண்ணீர் வரக்கூடிய விடயம் ஒன்று உள்ளது! அது இங்கிருந்து செல்லும் கடைநிலை தொழிலாளர் பற்றி.
நம் நாட்டிலிருந்து வெளிநாடு செல்வோர்களில் கட்டிட பணிக்கு, வீட்டு வேலைக்கு, வணிக வளாகங்களில் உதவியாளர் பணிக்கு செல்வோர் ஏராளம்! இவர்களில் பெரும்பாலானோர் செல்வது முகவர்கள்(agent) மூலம்தான், இந்த முகவர்களாக இருக்கும் அனைவரும் நல்லவர்கள் இல்லை! இதனை நாம் திரைப்படங்களில் நிறைய பார்த்திருக்கிறோம் இருந்தும் அவர்களும் மாறவில்லை நம் மக்களும் புரிந்துகொள்ளவில்லை!

ஒருநாள் அபு தாபியில் உள்ள மரினா மால் சென்றிருந்தோம் அங்குகழிவறையில் ஒருவர் கைதுடைக்கும் காகிதத்தை அதற்கான உருளையில்இருந்து கிழித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்துகொண்டிருந்தார், அவரைபார்த்தும் என் நண்பர் ஒருவர் “அட பார்த்தால் நம்மூர்காரர் மாதிரி தெரியுது வாசென்று விசாரிப்போம்" என்று சொல்லி அவரிடம் சென்று விசாரித்ததில்தெரிந்தது அவருக்கு அரியலூர் பக்கம் என்று, மேலும் கேட்க அவர் சொன்னது “ எனக்கு கொத்தனார் வேலை வாங்கி தரேனு சொல்லி என்ன இங்க கூட்டிட்டுவந்தாங்க சார், இதுக்கு நானும் 1 லட்சம் ரூபாய் கடனா வாங்கி குடுத்தேன் அந்தக்கு விசா செலவுக்கும் அப்புறம் வேலைக்கும் சேர்த்து, ஆனா இங்கவந்தப்புறம்தான் தெரிஞ்சது எங்களுக்கு பாத்ரூம் க்ளீன் பண்ற வேல தான்னு!”. இவருக்கு தங்க இடம் கொடுத்திருப்பது mussafah என்ற இடத்தில், இவருடையஊதியம் மாதம் 600 திராம்கள், சாப்பாடு மற்றும் இலவசம், காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டும் பேருந்தில் ஏற்றி அவர்கள் வேலைஎங்குள்ளதோ அங்கு அழைத்துச்செல்வார்கள், மீண்டும் இரவு 11.30 மணிக்குபேருந்து வந்து இவர்களை குடியிருப்பிற்கு அழைத்துசெல்லும். இவர்கள் ஒரேஇடத்தில் பணி செய்யமாட்டார்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம், அதுஏனோ தெரியவில்லை! இவர்களுக்கு நல்ல உணவு கிடையாது நல்ல இருப்பிடம்கிடையாது. ஏன் இவ்வாறு மாட்டிய யாவரும் பூமியிலேயே நரகவேதனைஅனுபவித்துகொண்டுள்ளார்கள். சற்றே சிந்தியுங்கள் மாதம் ஏறக்குறைய ௭000 ரூபாய்க்காக இவ்வளவு சிரமங்கள்! இந்த கூட்டத்தில் கல்லாதவர்கள் மட்டும்அல்ல சில கலை கல்லூரியில் படித்த இளைஞர்களும் உண்டு! இவர்கள்ஒருபுறம் இருக்க, உண்மையிலேயே கட்டிட வேலைக்கு செல்பவர்கள் நிலையும்ஒரு வித கொடுமைதான், இங்கு கோடைகாலத்திலும் கூட இவர்கள் 12 மணிவரை வேலைசெய்வார்கள் அப்பொழுது சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பநிலை 40 ல் இருந்து 48 டிகிரி வரை இருக்கும், காலை எட்டுமணிக்கே 35 முதல் 40 டிகிரிவரை இருக்கும் வெப்ப அளவு! இந்த வெப்பத்தில் இவர்கள் பணியாற்ற வேண்டும்சற்றே சிந்தியுங்கள் நம்மூரில் 37 டிகிரி வெப்பத்தில் சாலையில் நடந்துசெல்வதற்கே நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம் என்று! இவர்களுக்கு கோடைகாலத்தில் மட்டும் மதியம்12 மணி முதல் 3 மணிவரை இடைவேளை இருக்கும். பொதுவாகவே இவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது 15 மணி நேரங்கள்வேலைசெய்வார்கள், இவர்கள் மட்டும் அல்ல பொறியாளராக பணிபுரிவோரும்மற்ற பலரும் (ஒரு சில மேலாளர் பதவியில் உள்ளவர்களை தவிர) குறைந்தபட்சம் 13 மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏன் என்னுடையபணி நேரமே அவ்வளவுதான் சிலநாட்கள் காலை 8 மணியிலிருந்து அடுத்த நாள்காலை 4 மணி வரைக்கும் பணி செய்திருக்கிறேன்! இந்த தொழிலாளர்கள்தன்னுடைய கவலைகளை மறைத்துக்கொள்ள பல தவறான வழிகளிலும்செல்கிறார்கள், அவர்களை சொல்லி குற்றமில்லை, உண்மையில் சொல்லபோனால் அந்த நாட்டவர்களின் மறைமுக கொள்கை அது, தான் கொடுக்கும்ஊதியம் தன்னிடமே திரும்பி வரவேண்டும் என்பது அது. வீட்டுதொழிலாளர்களும் பல்வேறு சிரமங்களையும் கொடுமைகளையும்பொறுத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். இவ்வளவும் பொறுத்துக்கொள்வதுதன் இல்லத்தார் மகிழ்ச்சியை எண்ணியே ஆனால் இவர்களை நினைத்து இவருடைய பக்கத்து வீட்டுகாரர் சொல்வார் “ பாரின் காசு வர்றதுனால அவங்கஆடுற ஆட்டத்துக்கு அளவே இல்ல”, அவர்களுக்கு நான் சொல்கிறேன், நீங்களும்வந்து பாருங்க ஆட்டம் கண்டு போயிடுவீங்க!


அல் எய்ன் நகரில் சூரியன் மறையும் நேரம்


துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் - இந்திய வளாகம்


துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் - சீன வளாகம்


மெரீனா கடற்கரை - அபுதாபி



Palace Hotel -ன் வாயில்

லேபிள்கள்: , , , , , , ,